நான் கடவுள்

பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!



ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட சிறுவனுக்கு தாய் மீதான வெறுப்பு, தாய்க்கு மகன் மீதான வெறுப்பு என்ற மைய புள்ளி கொண்டு, கோபம்/வீரம்/பராக்கிரமம் கொண்ட ஆணை மையமாகப் பேசியது நந்தா. ஈழத்தமிழ் அகதிகளின் பகுதியையும் தொட்டுச் சென்றதில் என் மனதையும் தொட்டுச் சென்றது. மூன்றாவது பிதாமகனில் அதே ஆண், அதே கோபம், அதே வீரம், அதே பராக்கிரமம், அதே பித்து நிலை என அயர்ச்சி தட்டியபோதும். லோக்கல் களவானியின் களவானித்தனம், திருட்டுத்தனம், வெள்ளந்தி பாசம், நட்பு என சிறுக அன்பையும் சூர்யா பாத்திரம் மூலம் கொண்டு சென்றது.


இவ்வாறு பாலாவின் மூன்று படங்களும் பராக்கிரம, ஆண்மைத் திமிர் திரண்ட கட்டழகன்களை மையமாக கொண்ட ஆணாதிக்க படமாக, பார்வையாளர்களின் பைத்தியநிலையை, மிருகத்தை தூண்டிவிடும் வேலையையே செய்தது. இது போக வேறுசில விமர்சனங்களும் அப்படங்கள் மீது உண்டு. ஆனாலும், சராசரி திரைக்கழிவுகளுக்கு மத்தியில் மாற்று முயற்சி என்ற அளவில் பாலாமீதும், அவரது படங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு.




வருடக்கணக்காய் காத்திருந்து, காந்திருந்து நான் கடவுள் பார்த்தவர்கள் அனைவருமே கதை குறித்து, தங்கள் விமர்சனங்களை வைத்து தீர்த்தாயிற்று. எனவே, இதுவரை, பொதுவாக அனைவரும் வைத்த விமர்சனங்கள் போக சில கருந்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.




நான் கடவுளின் அகோரி வழக்கமான அதே ஆண்மைத் திரட்சியின் நான்காவது பதிப்பாக இருந்த போதும், அதைக் கடந்து வேறெந்த நாயகத்தனமும் ருத்ரனுக்கு இல்லை. உண்மையில் படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.


ருத்ரன் பாத்திரம் மூலமாக, அகோரிகளின் சடலம் சூழ்ந்த அமானுஷ்ய வாழ்க்கையை மட்டும் தொட்டுச் செல்லாமல் "நானே கடவுள்" என்ற தத்துவத்தை (கண்டிப்பாக ஆன்மீகம் அல்ல), நமக்குள் நாமே கடவுள், கடவுள் என்று தனித்து வெளியில் எதுவும் இல்லை என்பதையே இயக்குநர் பாலா முன்னிறுத்துவதாக நான் உணர்கிறேன்.



திருநங்கைகளை கேவலமாக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் திரைக்கோமாளித்தனங்களுக்கு மத்தியில் திருநங்கை கீர்த்தனாவின் பாத்திரம் ஆறுதலானது. திருநங்கைகள் குறித்த செயற்கை பிம்பங்கள் எதுவுமன்றி, இயல்பான நீரோட்டமாக பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றிகள். நன்றியைக் கடந்து இரு நெருடலகள். விளிம்புகள் அதிலும், பிச்சை எடுப்பவர்கள் என்று ஆனபின் ஒரு திருநங்கையையும் சேர்த்துக் கொள்வோமே என்று யோசித்து சேர்த்த பாத்திரமாகமே இத்திருநங்கை பாத்திரம் தோன்றுகிறது.

கீர்த்தனாவின் உடை சேது-ஈஸ்வரி ராவ் பாத்திரத்தின் உடையைப் போல (ஆண்சட்டை, பாவாடை) இருப்பது ஆரம்பத்தில் நெருடலாக இருந்தாலும், பிச்சைத் தொழில் முதலாளியிடம் பணிபுரியும் திருநங்கையாக வரும் இப்பாத்திரத்திற்கு இவ்வுடை பொருத்தமாகவே உள்ளது. (புடவை/சுடிதார் கட்டி முழு பெண்நிலையில் வாழும் பெண்கள் இத்தகைய சூழலில் வாழும் வாய்ப்பில்லை என்பது நிதர்சனம்) வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டாமல் குறையாமல் இயல்பாக தன் பணியை செய்து முடித்த திருநங்கை தோழி கீர்த்தனாவிற்கு வாழ்த்துக்கள்.


சரி, இப்படி திருநங்கையை கண்ணியமாக காட்ட இப்பாத்திரம் தேவை என்று சந்தோசப்படும் வேலையில், நயந்தாரா வேடம் கடுப்பேற்றுகிறது. அப்பாத்திரம் திருநங்கை அல்ல என்ற போதும், குறிப்பாக எண்விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விதமாக நயந்தாரா என்ற பாத்திரப் பெயரும், சுருக்கமாக நயன் என்று அலைக்கப்படுவதும் தேவையற்ற குழப்பதை, அதன் மூலம் அருவெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.


எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்? தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்? நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? பொற்காலம் படத்தில் இறுதிக்காட்சியில் வடிவேல் "கறுப்பான எனக்கெல்லாம் உன் தங்கச்சியக் குடுக்கக்கூடாதுன்னுதான நினெச்ச?" என்று கேட்பது நினைவிற்கு வருகிறது.



இப்படத்தின் முடிவு மிகவும் ஆபத்தான அரசியலை முன்வைக்கிறது. அகோரி ஆங்காரம் கொண்டு தீயவர்களை அழிக்க, தீயவை அழிய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்ட பின்பும் வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது. இதை இயக்குநர் பாலா உணர்ந்துதான் செய்துள்ளாரா என்பதை பேட்டியெடுக்கும் நிருபர்கள் கேட்டு சொன்னால் கொஞ்சம் உதவியா இருக்கும்.


இறுதியாக, தனது வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு மிருகமல்லாத, மானுடம் பேசும் மாற்றுப் படமொன்று தரவேண்டுமென்று இயக்குநர் பாலாவின் சராசரி ரசிகையாக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

ஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நிகழ்பதிவு

ப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான புவியியல் வன்முறையை, சிங்கள ராணுவரசின் தமிழின சுத்தீகரிப்பு கொடுமையை, இந்திய அரசின் நிழல் போரை, ஆயுத உதவி மற்றும் இராணுவ பயிற்சியை நிறுத்தக் கோரி பிப்ரவரி 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களும் இந்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் சிறப்பாக நடந்தேறியது.



எழுத்தாளர்கள்/கவிஞர்கள் தலைமையில், மாணவர்கள், மீனவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் மொத்தம் 100 பேர் இணைந்து அரசியல் கட்சி சார்பற்று மனிதம் காக்க வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் நடத்திக்காட்டினர்.



இம்மூன்று நாள் போராட்டத்தில் அம்மை நோயின் காரணமாக முதல் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் பங்குபெறமுடிந்தது. முதல் இரண்டு நாட்களும் நடந்த அறப்போர் வெறும் மனத்திருப்தியன்றி தீர்க்கமான பலன் அளிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இலங்கை தூதரகம் முன்பாக 28 பேர் கொண்ட குழு நடத்திய இரகசிய போராட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ராணுவ ரத்தவெறியன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு, ராஜபக்சே உருவப்படத்தில் செறுப்படி, போர் நிறுத்தம் மற்றும் இந்திய, இலங்கை அரசுக்கெதிரான முழக்கம் என அதிதீவிர போராட்டமாக அமைந்தது. 2 நிமிடத்திற்கு மேல் எந்த போராட்டமும் நிகழ்த்த முடியாத அப்பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடம் தீவிரம் குறையாமல் ஒரு சடங்கியல் நிகழ்வு போல, மொத்த ஈழமக்களின் ஆக்ரோசமும், கண்ணீரும், வலியும் வழிநடத்தியது போல, யாரும் யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு அர்ப்பணிப்போடு அப்போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினர். இதுவரை, தேசிய அரசு ஊடகங்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஈழப்பிரச்சனை அன்று சிறிதளவேனும் கவனம் பெற்றதும் அதையொட்டிய சில அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டதும் இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.





கட்சி சார்பின்றி முழு அர்ப்பணிப்போடு, தூயமையான உள்ளத்தோடும் போராடிய அக்குழுவை தீண்டவும் அஞ்சி நின்றது தில்லி காவலர்கள் குழு. மிக கண்ணியாமாக, சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு இரவு 7 மணியளவில் சேர்த்தனர்.




ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்ற குடையின் கீழ் நடந்த இவ்வறப்போரட்டத்தை குறித்த முழு தகவல்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. தமிழின விடுதலை வேண்டிய நிகழ்ந்த தாமதமான முயற்சி என்றாலும், மிக மிக அவசியமான முன்னுதாரணமான சுயலாபமற்ற முயற்சி இது. பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இதன் அமைப்பாளர்களான திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, சுகிர்தராணி மூவருக்கும் என் மனமார்ந்த தீரவாழ்த்துக்கள்.


இப்போராட்டம் முழு அர்த்தம் பெற தொடர்ந்து மக்கள் புரட்சியாக மாறவேண்டும். மாநிலம் முழுவதும் இப் போர் நிறுத்தப் போராட்டத்தை நாம் அனைவருமாக முன்னடத்திச் செல்ல வேண்டும். சோம்பலை, தடைகளைக் கடந்து பங்காற்றுவோம்.

தமிழ் ஈழம் வெல்லட்டும்! மானுடம் வெல்லட்டும்!!

ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்

என் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!


1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம். விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் காலத்தில் கட்டாயம் ஏற்படுத்திய நல்மாற்றம். ஆனால், அதையும் வளரவிடாமல் தடுக்க காலவரையற்ற விடுமுறையளித்து, விடுதி மாணவர்களை கட்டாயமாக ஊருக்கு அடித்துத் துரத்தி தன் ஜனநாயக அத்துமீறலை நடத்துகிறது தமிழக அரசு.


மனசாட்சியால் உந்தப்பட்ட மானமுள்ள பெருவாரி மனிதக்கூட்டம் நேற்று முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அணி திரண்டது. அது குறித்த செய்தியோ பெரும்பான்மை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து தன் பாசிச முகத்தை பள்ளிளுத்து காட்டியது. தமிழகம் அல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இம்மக்கள் எழுச்சி ஊடக கவினம் பெறாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது. (விதிவிலக்கு ஆஜ்தக்)


போதாக்குறைக்கு, மாணவர்களின் ஒற்றுமையை போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாய் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற கட்டாய விடுமுறையும், விடுதி வெளியேற்றமும் செய்துள்ளது தமிழக அரசு. இங்கே நாம் யோசிக்கவேண்டியது உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதையும் விட, சகமனிதர்கள் என்ற நிலையில் அவர்கள் சந்திக்கும் அல்லல்களில் ஒரு சதவீதம் எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வோம்? தப்பு, வேண்டாம் அதுகுறித்து நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போவதில்லை. எனக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் கையறு நிலையில் வெறும் அமைதி காக்கிறோம்.


நான் கேட்க விரும்புவது சுரணை, கோபம், இயலாமை மிஞ்ச நம் கற்பனைக்கு மீறி தன் உடலை பொசுக்கிக் கொண்ட சகோதரன் முத்துக்குமாரனின் மரணவாக்குமூலம் நம் மீது காறி உமிழ்வது எதனை? முத்துக்குமாரின் சுரணையில் ஒரு துளி, கோபத்தில் ஒரேயொரு புள்ளி அளவாவது நம்மிடம் இருக்குமானால் நாம் என்ன செய்யலாம்...?

********

என்ன செய்வது என்று யோசித்த சில படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், உழைப்பாளிகள் என்று பலதரப்பட்ட அன்பர்கள் ஒன்றுகூடி நாடுதளுவிய எழுச்சிப் போராட்டத்தை இந்தியத் தலைநகரத்தில், நாடாளுமன்றத்தின் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.


ஏன் நாடாளுமன்றம் முன்பு?

நாடாளுமன்ற இறுதிக் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துவங்கவுள்ளது. தமிழக அரசு கள்ள மௌனம் சாதிப்பதை நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்திருக்கையில், தமிழகத்தில் நமது போராட்டம் புல்லுக்கு இறைக்கும் நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமது இலக்கு நாமே மத்திய அரசின் கவனத்தை நேரடியாக பெறுவது. மாநில அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னெழுச்சி அலை தீவிரமாக இருக்கும் இந்நிலையில் நாடு தழுவிய தீவிர போராட்டம் மத்திய அரசின் கவனத்தையும், அயல்நாடுகளின் கவனத்தையும் பெறவேண்டியது அவசியமாகும்.



ஈழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு (சிங்கள ராணுவத்திற்கு) இந்திய அரசு அளித்துவரும் ஆதரவையும், ஆயுதங்களையும் திரும்பிப்பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கி அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது. தனித்தனி இயக்கங்கள் ஏதோவொரு நாளில் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அல்லாமல் அனைவரும் ஒன்று கூடி பெருந்திரளாக அணிதிரண்டு தில்லியிலுள்ள மாணவர்கள், மனித உரிமை போராளிகள் அனைவருடன் ஒன்றுகூடி இந்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பேரணியில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்பமுள்ள அன்பர்கள்

பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்

+91 98410 43438

+91 97897 12488


அயல்நாடுகளில் அல்லது கலந்து கொள்ள வாய்ப்பில்லாத ஆர்வமுள்ள நண்பர்கள் இப்பேரணி சென்றுவர, சில தினங்கள் அங்கே தங்க தேவைப்படும் பொருளாதார உதவியும், இம்முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளும் அளித்து உதவ வேண்டுகிறோம்.


தன் மரணம் நிச்சயமாக ஒரு அதிர்வை, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்க்கமாக அறிந்தே தன் இன்னுயிரையும், தன் கனவுகளையும், தன் உறவுகளையும் தீயிடம் அர்ப்பணித்தான் நம் சகோதரன் முத்துக்குமாரன். அவனது மரண வாடை கருகித் தீர்வதற்குள் மேலும் மரணங்கள் ஈழத்தில் நிகழாமல் தடுப்போம். மனிதர்களாய் சகமனிதர்களை நேசிப்போம்... மனிதம் காப்போம். நன்றி!!

2009 - புத்தகக் கணக்கு

கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது. கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல(அதான் எனக்கே தெரியுமேன்னு சொல்றிங்களா!).

இதுவரைக்கும் எனது புத்தகம் குறித்து நான் எப்போதும் பேசிக்கொள்ளாததற்கு காரணம் தன்னடக்கம்னு தப்பா நெனச்சிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. உண்மையான காரணம், ஒரு முழு பெண்ணா ஸ்மைலியாகவே என்னைப் பார்த்து பழகிவிட்ட என் தோழமைகளிடம் என் கடந்த காலத்தின் இருளை காண்பித்துக் கொள்ள இருந்த மனத்தடை. அப்புறம் எதுக்கு புத்தகம்? இணையம் அல்லாது பொது வாசகர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், கிழக்கு எனது சொந்த வாழ்க்கைக் கதையையே அத்தியாமாகச் சொன்னால் நம்பகமான சாட்சியமாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டதன் விளைவு தான் இந்த புத்தகம். இதில் எனது சந்தோசம் ஓரளவு விற்பனை இனிவரும் மாதங்களில் வரும் பொருளாதார பிரச்சனைக்கு துணையாக உதவும் என்பதே.



* * *


புத்தக வாசிப்பின் அதீத எல்லையை சற்றேறக்குறைய அடைந்தவர் எனது வணக்கத்திற்குரிய ஆசான் திரு. மிஷ்கின். சமீபத்தில் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சினிமாவிற்கு முன்பு கண்டிப்பாக படிக்க வேண்டிய 11 புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். குறிப்பாக எனக்கு, வடிவேல் மற்றும் ஈஸ்வரிக்கு எந்த தமிழ்புத்தகத்தையும் (பட்டியலிலுள்ள இரண்டினைத் தவிர) தற்காலிகமாக தொடக்கூடாது என்றும் கூறிவிட்டார். தமிழ்துரோகியெல்லாம் கிடையாது அதற்கான காரண காரியம் வேறு. இதுபோக, Richard Bachன் Jonathan Livingston Seagull என்ற புத்தகத்தையும் தனிப்பட்ட முறையில் எனக்கே எனக்கென வாசிக்கத் தந்துள்ளார்.

அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்.

1. SIDDARTHA - Herman Hesse, Penguin publishers

2. DOLL HOUSE - Ibson

3. THE SOUND OF WAVES - Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)

4. பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)

5. ஒரு வடக்கன் வீர கதை Script (தமிழில்) - சுரா, காவ்யா பதிப்பகம்

6. GRIMM'S FAIRY TALE - Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307)

* Rose But

* The Queen Bee

* The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்

7. ON DIRECTING FILM - David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)

8. CRONICALS OF DEATH FORETOLD - Gabrial Garcia Marquez

9. OUTSIDER - Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)

10. LONE WOLF AND CUB, VOL(1) - Kazuo Koike

11. METAMORPHOSIS - Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)



எண் (7) டேவிட் மேமத் எழுதிய ON DIRECTING FILM தவிர மற்ற புத்தகங்கள் சினிமாவிற்கு நேரடி தொடர்பில்லாதவை போல தோன்றலாம். ஆனால் ஒரு திரைக்கலைஞருக்கு தீவிர இலக்கிய பிண்னணி கட்டாயம் வேண்டும் என்பது அவரது அறிவுரை. மேலும் அயல் இலக்கியங்களை கூடுமானவரை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதையே அவர் பரிந்துரைக்கிறார்.

மேற்குறிப்பிட்ட புத்தகங்களில் எண் வரிசை 3, 4, 6, 7, 10, 11 புத்தகங்கள் எனது முயற்சிகள் எதிலும் கிடைக்கவில்லை. நண்பர்கள் முன்வந்து இப்புத்தகங்களை எனக்கு பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.


* * *



நான் மோகிக்கும் நாடக வல்லரசு ச.முருகபூபதி. இந்த ஆண்டிற்கான தேசிய நாடக பள்ளி நடத்தும் நாடக விழாவிற்கான பயணத்திற்கு வழியனுப்பிவிட்ட சென்னை சென்ட்ரலில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தேன். நாடகம் மீதான, கலை இலக்கியத்தின் மீதான என் இரசனையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது அறிமுகம் கிடைத்த நாள் முதல் அவருடைய நாடகங்களில் பங்கேற்க முயன்று பல காரணங்களால் கூடாமல் போனது. இப்போது நாடகத்திற்கான அத்தனை செட் ப்ராப்பர்ட்டீசுடன், நடிக நண்பர்கள் செல்ல நான் மட்டும் வழியனுப்பிவிட ரணமாக இருந்தது.

பயணநேரத்தின் அவசரகதியில் இருந்தவர்களை ஏக்கமாக வேடிக்கை பார்த்தபடி மனதைத் தேற்றிக்கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக, அவரது "செம்மூதாய்" நாடக நூல் தொகுப்பினை பையிலிருந்து நீட்டினார். புது புத்தகத்தின் வாசத்தை நுகர்ந்துகொண்டிருக்கும் போது, "இப்பத்தான் கைக்கே புக்கு வந்துச்சு, முத பிரதிய உனக்கு தான் தரேன்" என்று ஆனந்த அதிர்ச்சியூட்டினார். இவ்வருடத்தின் மிக முக்கிய பரிசு இப்புத்தகம்.


இத்தொகுப்பில், செம்மூதாய் உட்பட ஆறு நாடகங்கள், யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதி, பாண்டி முனி, ஆகியோரின் விமர்சனங்கள் இவற்றுடன் அவரது நீண்ட தெளிவான நேர்காணல் ஆகியவை உள்ளது. முருகபூபதியின் நாடகங்களை பார்ப்பதற்கு/படிப்பதற்கு முன் இந்நேர்காணல் படிப்பது அவ்வனுபவத்தை முழுமையாக்க உதவும். நேர்காணலையும், விமசர்னங்களையும் மட்டும் படித்தாச்சு. நாடகங்களை இனிதான் படிக்க வேண்டும். அழகான அச்சாக ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான "தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்" வாங்கினேன். படித்தேன். நூறு சதவீதம் என் கருத்துகளோடு ஒன்றிப்போன கருத்துகள். அனைத்தும் நான் எழுத நினைத்து, எழுதாமல் விட்டவை. மனநெருக்கத்தை ஏற்படுத்திய இப்புத்தகம் தோழமை பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு. இளம் சினிமா உதவி இயக்குநர்கள் படித்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியமான புத்தகம்.


சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், "மூன்றாம் பாலின முகம்" என்ற நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். கூடவே சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்" நூலையும் வாங்கிக் கொண்டேன். மேலே குறிப்பிட்ட 11 புத்தகங்களையும் வரிக்குவரி டிக்சனரி வைத்து படிக்கவே இந்த ஆண்டு பத்துமான்னு தெரியாது.


* * *


இதுவரை வலைப்பூவில் ஓரளவு தேறும் விதமான சில கட்டுரைகளையும், மற்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக போட முயற்சித்தேன். பட வேலைகளில் அது முடியவில்லை. பிப்ரவரிக்கு பின்பு அதற்கான பணியில் இறங்குவேன்.

புத்தாண்டு - புன்னகை பார்வையில்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்ந்த்துக்கள். இவ்வருடம் தாங்கள் வேண்டிய காரியங்கள், திட்டங்கள் அனைத்தும் வெற்றி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.




கடந்த 2008 திருநங்கைகளுக்கு மிகவும் சாதகமானதாகவே அமைந்த்து. கல்லூரியில் திருநங்கைகள் சேர்க்கை, திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் கணக்கெடுப்பு, வாக்காளர் /அடையாள அட்டை என பல நல்ல மாற்றங்கள் அரசு தரப்பில் ஏற்பட்டுள்ளன.


திருநங்கைகளிடமும் பல நல்ல மாறுதல்களைக்காண முடிந்தது. திருநங்கை சகோதரி ரம்யா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் தொடர்ந்து அதிகாரத்திற்கு வரவேண்டும் திருநங்கைகளுக்கான பிரதிநிதியாக பல அரசியல் மாற்றங்களை கொண்டுவர வாழ்த்துவோம். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது வீட்டிற்கும் வெள்ளிதோறும் விஜயம் செய்து வெற்றி பெற்றுவருகிறார் திருநங்கை ரோஸ். திருநங்கை என்ற அங்கீகாரத்துடன் சென்னைப் பலகலைக்கழகத்தில் முதுகலை பத்திரிக்கையியல் பயின்று வருகிறார் கிளாடி என்னும் இளைய தலைமுறை திருநங்கை. இப்படி இன்னும் பல வெற்றி சான்றுகளை 2008 தமிழகத்திற்கு தந்து தன் கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளது.



****


இனி 2009 செய்யவேண்டியதெல்லாம்,


அரசு, திருநங்கைகளுக்கு எது சரியான தேவை என்பதை முழுதாக உணர்ந்து வேலைவாய்ப்பு, முழு கல்வி வாய்ப்பு, பெற்றோர் உதவியின்றி படிக்கும் திருநங்கைகளுக்கு உள்ள பொருளாதார, தங்குமிட சிக்கல்கள் தீரும் வண்ணம் பகுதி நேர வேலைவாய்ப்பு,தங்குமிட வசதி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், இவை அனைத்திலும் மிக முக்கியமாக குடும்ப மற்றும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகியவற்றில் சிந்தனை செலுத்தவேண்டும்.


தற்போது வருகின்ற திரைப்படங்களில் திருநங்கைகளை நல்லவிதமாக காட்டவேண்டும் என்ற பிரக்ஞை இருக்கின்ற அளவில் சரியான புரிதல் இல்லை உதாரணமாக தெனாவெட்டு. (இன்னும், சிலம்பாட்டம் போன்ற சில்லறை படங்களில் திருநங்கைகளை அசிங்கப்படுத்தும் ஈனச்செயலையும் நிறுத்தவில்லை-வெறுத்துப் போயிட்டேன், ஒன்னும் சொல்றதுக்கில்லை)அவ்வாரில்லாமல் சரியான புரிதலோடு, மிகையில்லாத கதாப்பாத்திரங்களாக திருநங்கைகள் திரையில் வலம்வர இப்புத்தாண்டு உதவ வேண்டும்.


இன்றும் சில திருநங்கைகள், தங்களது உரிமை / தேவைகளாக இலவச வீடு, அடையாள அட்டை, திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம் என மொக்கையான வேண்டுகோள் வைப்பதை விட்டுவிட்டு, தெளிவாக கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், குடும்ப அங்கீகாரம் அதற்கான விழிப்புணர்வு இவற்றை முன்மொழிய வேண்டும் என்பது எனது புத்தாண்டு வேண்டுகோள்.


****


சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ஜெமினி சர்க்கஸ் காட்சியை பார்த்தேன். சிறுவயது முதல் பார்த்தவை என்றாலும் இப்போதும் பார்ப்பதற்கு பரவசமாக இருந்த்து. சில ரிஸ்கான சாகஸத்தின் போது பார்க்க பயமாக சீக்கீரம் முடிந்திடாதா என்றும் தோன்றியது. சிலச்சில தவிர்க்கமுடியாத குறைகளைத் தாண்டி பெரும்பாலான சாகஸங்கள் ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது. எனது மனவருத்தமெல்லாம் ஒவ்வொரு சாகசம் முடிந்தபின்னும் அக்கலைஞசர்கள் பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெருமித்துடன் எதிர்பார்க்க அங்கங்கு ஒருசிலரே கைத்தட்டுவதை காணமுடிந்த்து. பார்வையாளர்களில் பலர் மெய்மறந்து ரசிக்கவில்லை அதனால், அவர்களது கலையை அங்கீகரிக்கவும் இல்லை. ஏதோ ஒரு விடுமுறையை, சில மணித்துளையை செலவு செய்யத்தான் இப்படிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையோரிடம் உள்ளது.


கலையை கொண்டாடுங்க, அங்கீகரிங்க இல்லைன்னா இருக்கவே இருக்க உங்க வீட்டு முட்டாள் பொட்டி. வானத்தில் பொய்யாய் பறந்து, ஒரு குச்சி பல குண்டாந்தடியை அநாஸ்யமாய் தாக்கும் காமிடியையே பார்த்து பொழுத போக்குங்க..


எதோ புத்தாண்டுக்கு என்னால முடிஞ்ச கருத்து....


***


நண்பர்களே திருநங்கைகள் குறித்த தங்களது சந்தேகங்கள் அல்லது அவர்கள் மீதான தங்களது விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு சந்தேகம் / விமர்சனம் என தலைப்பிட்டு பின்னூட்டமிடவும். அவற்றை தொகுத்து, பயன்படும் கேள்விகளுக்கு என் பதிலை தனிப்பதிவாக தருகிறேன். நன்றி!!

நன்றி " WELCOME TO SAJJANPUR "




திருநங்கைகளை மனிதர்களாக காட்டிய இந்தியத் திரைப்படங்கள் வெகு சில என்பது நாம் அறிந்ததே. தமிழில் கூட வெளிவரக் காத்திருக்கும் சில படங்களில் திருநங்கைகளை கௌரவமாக காட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நந்தலாலா, பால், நான் கடவுள், தெனாவெட்டு, கருவறைப் பூக்கள் என சிலவற்றைக் கூறலாம். ஹிந்தியில் தமன்னா, ட்ராபிக் சிக்னல் மற்றும் சில படங்கள் கண்ணியமான முயற்சிகள்.


இயல்பான கிராமத்தையும், போகிரபோக்கில் அக்கிராமத்தின் வன்முறையையும் சொல்லி சொல்லும் எளிமையான படம் " WELCOME TO SAJJANPUR ". படத்தில் நல்ல விசயங்கள் பல இருந்தாலும் அதைச் சொல்வதற்கல்ல இப்பதிவு.


ஒருசிலரைத் தவிர எழுத்தறிவு முற்றாய் அற்ற சாஜன்பூர் கிராமத்தில் முன்னிபாய் என்ற 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை கதாபாத்திரம். உத்திரப்பிரதேசத்து typical திருநங்கையாக வரும் முன்னிபாய் அக்கிராமத்தின் அதிகாரமிக்க பணக்காரன் ராம் சிங்கின் மனைவி ஜமுனா தேவியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார். ஆரம்பத்தில், வழக்கமான திருநங்கைகள் போல கைதட்டி பாட்டுப்பாடி தெருக்களில் அலப்பரையாக வலய வரும் முன்னிபாய் மற்றும் குழுவினரை பார்த்து பயந்து அசூசையுடனே எதிர்கொள்கிறான் நாயகன் மகாதேவ் (பார்வையாளர்களின் சார்பில்)





தேர்தல் பிரசாரத்திற்கு பணங்களை வாரியிரைத்து வசதியாக வலம் வரும் ராம் சிங்கிற்கு எதிராக எளிய முன்னிபாய் உற்சாகமாய் பாட்டுப் பாடி அனைவரையும் கவர்கிறார். ( பாடலின் பொருள் தெரியவில்லை, தெரிந்தவர்கள் அறியத்தரலாம். ) தனது கிராமத்து தேர்தலில் ஒரு திருநங்கை போட்டியிடுவதை அவமானமாக கருதும் ராம்சிங், கடிதம் எழுதித்தரும் மகாதேவிடம் கலெக்டரிடம் முன்னி பாய் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யுமாறு மனுபோடச் சொல்கிறான். அப்போது மகாதேவ் சொல்கிறான் இது கலியுகம் இனி திருநங்கைகளும் போட்டியிடலாம் என்று.


பணபலத்தாலும், ஆள்பலத்தாலும் முன்னிபாயை மிரட்ட முயற்சி செய்கிறான் ராம்சிங். ஒரு இரவில், மகாதேவ் டி.வியில் மாதுரி தீட்சித்தை ரசித்துக்கொண்டிருக்கும் போது, அவன் வீட்டை தட்டுகிறார் முன்னிபாய். வீட்டிற்குள் வரவும் தயங்கி நிற்கும் முன்னிபாயை தர்மசங்கடத்துடன் உள்ளே வர அனுமதிக்கிறான் மகாதேவ். அதுவரை உற்சாகமாக வலயவந்த முன்னிபாய், கண்ணீருடன் பேசும் நீண்ட வசனம் பொருள் தெரியாவிட்டாலும் புரிந்து கொள்ளமுடிந்தது. தானும் மனிதப்பிறவிதானே என தன் தரப்பு நியாயத்தை கேட்கும் முன்னிபாய்க்கு உதவுகிறான் மகாதேவ். அவன் எழுதித் தரும் மனுவின் பயனால் முன்னிபாய்க்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது, ராம் சிங் தனது மனுவிற்கு கைநாட்டு வைக்கிறார். முன்னிபாய் தனது மனுவில் கையெழுத்து போடுகிறார். அழகான கௌரவம்!


தேர்தலிலும் பல வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெருகிறார் நம் முன்னிபாய்... ஆனால், சில நாட்களிலேயே முன்னிபாய் ராம்சிங்கால் கொல்லப்படுகிறார். படத்தில் இறுதியில், மகாதேவ் எழுத்தாளனாக தன் அனுபவங்களை வைத்து நாவலாக இவற்றை எழுதியுள்ளான் என்று தெரிகிறது. மேலும், நாவலில் மட்டுமே முன்னிபாய் கொல்லப்படுகிறார். நிஜத்தில் M.L.A. ஆகி தன் பணியைத் தொடர்கிறார்.


திருநங்கைகள் ஏற்றம் பெருவதில் உள்ள நிதர்சன தடைகளை காட்டியிருந்தாலும், படம் முடிக்கும் போது விளிம்புகளுக்கும் மனிதாபிமானிகளுக்கும் நம்பிக்கை தரும்படியும் திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் ஷியாம் பெனகல்.

நன்றி!! என் சார்பிலும், ஒட்டுமொத்த திருநங்கைகள் சார்பிலும்!!

WALL - E





Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க, WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை WALL-E.


யாருமற்ற பூமியில் WALL-E க்கு துணையாய் இருப்பது ஒரேயொரு கரப்பான் பூச்சியும், பாடல் காட்சி கொண்ட பழைய வீடியோ டேப்பும் தான். பாடல் காட்சியின் இறுதியில் காதலர்கள் கைகோர்க்கும் தருணத்தில் துணையற்ற WALL-E தன் இரு கையையும் ஏக்கத்தோடு பற்றிக்கொள்வது நூற்றாண்டுத் தனிமையின் சோக கீதம். தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E. அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு. அழகிய iPod வடிவத்தில் அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.





BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள். முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான். விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.


700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.



பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது. அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER இனி செய்ய வேண்டியது நாமதானே!