பகிர்வுகள் : 2010

டந்த வருடம், பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்து மிக கடுமையான வருடமாக அமைந்து விட்டது. அதற்கு பொறுப்பும் நானே. 2010 எனக்கு நல்ல மாற்றம் தரும் நம்பிக்கையோடு துவங்கியுள்ளேன். புதுவருடம் துவங்கி மார்ச் மாதமே வந்த பிறகு புத்தாண்டு குறித்து எழுதுவதற்கு சிறப்பாக ஒன்றும் இல்லை.


ஆனால் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாக சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

நாடகம் :

கல்லூரி நாட்களில் என் மனதிற்கு நெருக்கமாக இருந்தது நாடகமும் நாடகம், சார்ந்த நண்பர்களும். கல்லூரி முடிந்து பின் வாழ்க்கைப் புயலில் பல நெருக்கடிகள், அனுபவங்களுக்கிடையே நாடகம் என்னிடம் இருந்து விலகி விட்டது. அல்லது நான் நாடகத்திடமிருந்து விலகிவிட்டிருந்தேன். மதுரை, சென்னை, சுயம், உதவி இயக்குநர் என பல தடங்களில் சென்ற பயணத்தில் நாடகத்திடமிருந்து அந்நியப்பட்டு போனேன்.

சென்ற வருடம் 2009 முழுவதும் வேலையின்றியும், உடல்நிலை சரியின்றியும் மன உளைச்சலில் சிக்கி தவித்தேன். அந்நிலையில் நண்பர் ஸ்ரீஜிதின் அறிமுகம் நாடகத்தில் மீண்டும் பங்குபெறும் வாய்ப்பிற்கு வழிகாட்டியது. ஊடக பயங்காரவாதம் குறித்த அரைமணிநேர நாடகம் என்.ராமயணத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.


மூன்று முறை மேடையேறி இந்நாடகத்திற்குப் பிறகு, தற்போது அ.மங்கையின் நாடகமொன்றில் நடிக்கும் வாய்ப்பும் வந்து ஒத்திகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மீட்டுருவாக்கம் என்பதை பொருள்கொள்ளும் வகையில் என்னை நான் நாடகத்தில் நிரப்பவும், மன நிறைவு கொள்ளவும் அ.மங்கையுடனான தோழமை உதவிவருகிறது.

இடையில், நண்பர் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் கவிதை வாசுப்பு (நாடக நிகழ்த்து வடிவில்) நிகழ்வும் நடந்தது. இதில் கவிஞர் மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றும், எனது இரண்டு கவிதைகளும் பாடுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. என்றோ ஒருநாள் மழை பெய்வது போல, ஏதோ ஒருநாள் கவிதை(என்று நான் நம்புவது) எழுதும் பழக்கமுள்ளவள். கவிதை எழுதுவது குறித்து எந்து உற்சாகமும் எனக்கு இருந்ததில்லை. ஆரம்பத்தில் கவிதை வாசிப்பில் எனது கவிதையை எடுத்துக் கொன்டதாக ஸ்ரீஜித் சொன்ன போது எனக்கு பெரிய ஆர்வமில்லை. ஆனால், நிகழ்வு சிறப்பாக முடிந்த பிறகு எனது கவிதை குறித்தும், என்னை குறித்தும் கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன்.



திரைப்படங்கள்

மூன்று திரைப்படங்கள் குறித்து பேச விரும்புகிறேன்.



ஆயிரத்தில் ஒருவன் - அநேகமாக எல்லோரும் பேசி முடித்தது தான். நல்ல முயற்சி என்றும் சொல்லலாம். படத்தில் குறிப்பாக பாராட்ட விரும்புவது. சோழர்கள், புலி அடையாளம், தங்களை மீட்க சோழர்கள் வருவார்களா என, இறக்கும் தருவாயில் கடல் தாயை ஏக்கத்டுடன் பார்க்கும் சோழ மன்னன். ஈழத்தை நினைவுபடுத்தும் எல்லாம் சரி. ஆனால், கதை? கதை குறித்தோ, சோழ/பாண்டியர்கள் குறித்தோ இயக்குநருகு தெளிவில்லாதௌ ஏன்? சோழ நாடு சோறுடைத்து, ஆனால் எங்கள் சோழர்களை சோத்துக்கு விதியில்லாமல் ஆக்கியது சொல்லுங்கோள் ஆக்க்செல்வராகவன், ஏன்? பயங்கர திட்டமிடளுடன் அதிபயங்கரமாக ஏழு பொறி வைக்க முடிந்த சோழர்களால் சோத்துக்கு வழி செய்யமுடியாது என எப்படி யூகித்தீர்கள்? போதாததற்கு சோழ அரசன் நரபலி கொள்வதும், குரங்கு சேட்டை செய்வதும் ஏன்? கட்டட, விவசாய, இலக்கிய வளம் நிறைந்த ஒரு இனத்தை நாகரீகமற்ற சமூகமாகக் காட்டியது என்ன நாகரீகம்?

அடப் போங்கயா!! நீங்களும், உங்க புதுமையும்.

சொட்சி என்ற யோகி



உலகப் படம் / எதார்த்தப்படம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட பொறுக்கித்தனமான படம் யோகி. பின்ன என்னங்க, எதார்த்தம்னற பேர்ல, சேரி, அதுல (சகல ஹீரோரோயிஸத்துடன் கூடிய) ஹீரோ. காப்பியடிச்சாலும், தெளிவா காப்பியடிச்சிருக்காங்கப்பா. ஒரிஜினல் யோகியோட முத சீன்ல எல்லாரும் சேர்ந்தும் செய்றது கூட்டு கொல முயற்சி தான். நான் நம்ம யோகி வானத்துலர்ந்து குதிச்ச லாடு லபக்குதாஸாச்சே, அவரே தனியாள வெறப்பா, கொல பண்ண்டிட்டு, டெய்லா வருவாரு. ஆனா ஒரிஜினல்ல கொல பண்றதே ப்ரென்டுங்கள்ள ஒருத்தன் தான்.

சரி Hஈரோயிசன்னாலும் பரவால்ல. ஒரிஜினல்ல நண்பர்கள் சண்ட போட்டுக்கிட்டாலும், அவங்களுக்குள்ள அழகான நட்பும், அவங்க வாழ்க்க நெலம பத்தின பரிதாபமும் சூப்பரா சொல்லிரிப்பாங்க. இங்க, நாலு பேரும் பணத்துக்காக மட்டும் யோகிகூட பழகுற மாறியும், கொஞங்க்கூட ப்ரண்சிப்போட மதிப்பே தெரிய பொறுக்கிங்க மாறிதான் காட்டிருப்பாங்க.

அதெல்லாவுடுங்க, தொட்சி அந்த பாப்பா வீட்டுக்குப் போயி பொம்மைய எடுக்கும் போது, தான் கொழந்தய இருந்த வீட்டோட வறுமையையும், இந்த வீட்டோட வசதிவாய்ப்பையும் நெனச்சு பாக்கும் போது, அந்த சமூக ஏற்றத் தாழ்வு அழகா காட்டிருப்பாங்க. இங்க, "உன்ன டாக்டர் ஆக்குறேன், கலெக்டர் ஆக்குறேன்னு" ஈரோவ, வெள்ளந்தியா காட்டுறேன் ஈரோயிஸம் காட்டுறாங்க. ஒன்னுல்ல, அந்த கைப்புள்ளய எடுத்துக்கிட்டு சின்ன வயசுல தொட்ஸி இருந்த எடத்துக்கு கூட்டிட்டுப் போற சீன் இருக்கே என்ன பொருத்த வரை அதுதாங்க மொத்தப்படமே. எவ்வளவு அழகா அந்த ஆயிஅப்பன் இல்லாத பிள்ளங்க வாழ்க்கைய பொய்யா பச்சாதாபம் சேக்காம காட்டிருப்பாங்க, நம்ம தமில் யோகிக்கு பரிதாபமா ஒரு ப்ளாஸ்பேக்.

மதுரையோ, மெட்ராஸோ எதார்த்த படம்னா, சேரி ஆளுக, பொறுக்கியா ரவுடித்தனமா திரியிறது தான் உங்க எதார்த்தம். போய்யா... போய் நெஜ சேரியும், சேரி ஜனங்களும் எப்பிடி இருப்பாங்கன்னு போயி நேர்ல பாரு.


விண்ணைத்தாண்டி வருவாயா



படம் நல்லா இருக்கா, இல்லை என்பது என் பிரச்சனை அல்ல. ஆனால், அலைகள் ஓய்வதில்லை முதல் இன்றைய (கோயில், மும்பை உட்பட) விண்ணைத்தாண்டி வருவாயா வரை கலப்பு காதல் கதைகளில் எனக்கு சில சந்தேகங்கள்.

ஏன் எப்பவும் நாயகன் இந்துவாகவும், நாயகி கிறிஸ்தவள்/முஸ்லீமாகவே இருக்கிறார்கள்?

ஏன் எப்பவும் இந்து நாயகனின் அப்பா/குடும்பம் நல்லவர்களாகவும், இந்துஅல்லாத நாயகியின் அப்பா/அண்ணன் வில்லனாகவும் இந்துக்களை வெறுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள்?

ஏன் நாயகனின் தங்கை நாய்கனின் காதலுக்கு ஆதரவாகவும், நாயகியின் அண்ணன் காதலுக்கு வில்லாதி வில்லனாகவும் இருக்கிறார்கள்?

விண்ணை தாண்டி வருவது இருக்கட்டும். முதலில், உங்கள் ஸ்டீரியோ டைப் ஆணாதிக்க/மதவாத சிந்தனையை தாண்டி நீங்கள் வாருங்கள்.


புத்தகம்

இதுகாறும் எழுதி வந்த கட்டுரைகளை தொகுத்து, கட்டுரை தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் (நோ, அழக்கூடாது) கொன்டுவரும் எண்ணம் இருந்தது. முயற்சியில்லை. தற்போது அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். விரைவில் வரக்கூடும். இது போக, கவிஞர் குட்டிரேவதியின் ஊக்குவிப்பில், தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள் குறித்த பதிவுகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை எழுதும் எண்ணமும் உள்ளது.

0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்: